×

தர்மபுரி அதிமுக கூட்டத்தில் அமைச்சருடன் செல்பி எடுக்க ஏராளமானோர் முண்டியடிப்பு: காற்றில் பறந்தது சமூக இடைவெளி

தர்மபுரி: தர்மபுரியில் நேற்று நடந்த அதிமுக கட்சி கூட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், அமைச்சருடன் செல்பி எடுக்க முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது. விவசாய அணி பிரிவு மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன் வரவேற்றார். எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் வி.பி.பி.பரமசிவம், அதிமுக மாவட்ட செயலாளரும், உயர்கல்வி அமைச்சருமான கே.பி.அன்பழகன் ஆகியோர் பேசினர். கூட்டம் முடிந்ததும், அமைச்சருடன் செல்பி எடுத்துக் கொள்வதற்காக, ஏராளமானோர் முண்டியடித்தனர். இவர்களில் பலர் முக கவசம் அணியாமல் வந்திருந்தனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என அரசு வலியுறுத்தி வரும் நிலையில், ஆளுங்கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில், ஊரடங்கு விதிகளை மீறி ஆயிரக்கணக்கானோர் ஒரு அரங்கில் கூடியது, கொரோனா தொற்று பரவலுக்கு வழி வகுக்கும் என்பதால் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : meeting ,Dharmapuri AIADMK ,minister , Dharmapuri, AIADMK meeting, with minister, to take selfie, banging, flying in the air, social gap
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...