சென்னை : சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கரை என்கவுண்டர் செய்த விவகாரம் தொடர்பாக 4 போலீஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை அயனாவரத்தில் போலீசை வெட்டிய ரவுடி சங்கர் கடந்த வாரம் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றனர். காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் ஆய்வாளர் நடராஜன். சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபாரக்கிற்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு உட்பட 50 வழக்குகள் உள்ளன. 5 முறை வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் பிடிபட்ட போது தான் என்கவுன்டர் நடந்துள்ளது. மனித உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல்துறை பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் ரவுடியை என்கவுண்டர் செய்த விவகாரத்தில் தொடர்புடைய 4 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். என்கவுண்டரின்போது ரவுடி வெட்டியதாக கூறப்படும் முதல்நிலைக் காவலர் முபாரக், தலைமைக்காவலர்கள் ஜெயப்பிரகாஷ், வடிவேலு, காவலர் காமேஷ்பாபு ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 பேரையும் சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், வேப்பேரி. டி.பி.சத்திரத்துக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.