×

கொரோனா காலத்திலும் பிற நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனா தொற்று காலத்திலும் தமிழக அரசு கொரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா காலத்தில் பிற நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மார்ச் 2020 முதல் இதுவரை 20,550 நபர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,077 நபர்கள் கோவிட் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1,347 நபர்களுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் 439 நபர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சவாலான சூழ்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,154 கர்ப்பிணி தாய்மார்களும் 37,436 குழந்தைகளும் உரிய சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். 805 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 88,280 அலகு இரத்தம் பெறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொய்வில்லாமல் நடைபெற்றதன் காரணத்தினால், கொரோனா தொற்று காலத்தில் பல விலைமதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் அணுக இயலாத நிலையில் கூடுதல் சேவைகளையும் அரசு மருத்துவமனைகள் திறம்பட எதிர்கொண்டு அர்பணிப்பு உணர்வுடன் அரசு மருத்துவமனைகளில் உயரிய சேவைகள் வழங்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன, என அவர் கூறியுள்ளார்.


Tags : Corona ,Minister Vijayabaskar , Health Minister Vijayabaskar, Corona, other patients
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!