×

பிரிய மனமில்லாமல் மனைவி சடலத்துடன் மயங்கி கிடந்த முதியவர்: கொடுங்கையூரில் சோகம்

சென்னை: உடல் நலக்குறைவால் இறந்த மனைவியை பிரிய மனமின்றி 2 நாட்களாக சடலத்துடன் முதியவர் மயங்கி கிடந்த சம்பவம் கொடுங்கையூரில் சோகத்தை ஏற்படுத்தியது. கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 97வது தெருவை சேர்ந்தவர் பொன்னுமணி (80), ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி கோமளா (எ) மலையாளத்தம்மாள் (70). தம்பதிக்கு குழந்தை கிடையாது. உறவினர்கள் யாருமின்றி தனியாக வசித்து வந்துள்ளனர். வயது முதிர்வு காரணமாக மூதாட்டி கடந்த 2 மாதமாக வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். அவரது கணவர் மட்டும் வெளியில் கடைகளுக்கு சென்று வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்து இருவரும் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த வீட்டினுள் சென்று பார்த்தபோது, மூதாட்டி கோமளா இறந்து அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை கட்டி பிடித்தவாறு கணவர் பொன்னுமணி மயக்கத்தில் இருந்துள்ளார். உடனடியாக பொன்னுமணியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தம்பதி கடந்த 1991ம் ஆண்டு இந்த வீட்டை வாங்கி குடியேறி உள்ளனர். இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் என்று யாரும் வந்ததில்லை. அக்கம் பக்கத்தினரை வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது. வயது மூப்பு காரணமாக மூதாட்டி இறந்திருக்கலாம் எனவும், அவரை பிரிய மனமில்லாமல் அவரது கணவர் மனைவியின் சடலத்துடன் கடந்த இரண்டு நாட்களாக இருந்துள்ளார், என தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதியவரிடம் போலீசார் விசாரித்தபோது, அழுதுகொண்டே என்னை எதுவும் கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மனைவியை பிரிய மனமின்றி அவரது சடலத்துடன் 2 நாட்களாக முதியவர் மயங்கி கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்தது.

Tags : Kodungaiyur , Tragedy in Kodungaiyur, the corpse of the wife, the bewitched old man, without a loving mind
× RELATED கேடுகளுக்கு வழிவகுக்கும்...