புதுடெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017 ஆகஸ்ட் 1ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது நிதியமைச்சராக அருண்ஜெட்லி இருந்தார். அவரது முதலாவது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஜிஎஸ்டியில் ஜெட்லியின் பங்களிப்பு குறித்து நிதியமைச்சகம் ட்விட்டரில் நேற்று வெளியிட்டிருந்தது. அதில், ஜிஎஸ்டிக்கு முன்பு வாட் வரி, கலால் வரி, விற்பனை வரி ஆகியவை இருந்தபோது வரி அதிகம். ஜிஎஸ்டியால் இந்த வரிகள் குறைந்துள்ளன. வர்த்தகர்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.
துவக்கத்தில், ஆண்டு வர்த்தகம் ரூ.20 லட்சம் வரை உள்ளவர்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த வரம்பு பின்னர் ₹40 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதுவரை ஆன்லைனில் 50 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 131 இ-வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காம்போசிஷன் திட்டத்தில் ஆண்டு வர்த்தக உச்சவரம்பு ரூ.1.5 கோடியாக உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்தபோது, துவக்கத்தில் 65 லட்சம் பேர்தான் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 1.24 கோடியை தாண்டி விட்டது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.