பெங்களூரு: ஓசூரில் விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருகிறது. கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவானது சிறப்பாக கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, 3 அடிக்கு மேல் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடக்கூடாது உள்ளிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வீடுகளில் வைத்து வழிபடலாம் என்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பக்தர்கள் தங்களது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். பின்னர் அதனை கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைத்தனர். அதுவும் நீர்நிலைகளில் கரைக்கும் போது தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் கரைக்க வேண்டும் என்ற உத்தரவும் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சூளகிரி பகுதியில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முரளி (12), பகவதி (13) ஆகிய இரண்டு சிறுவர்கள் ஆகியோர் மற்றொரு நபருடன் சேர்ந்து அங்குள்ள துறை ஏரியில் விநாயகர் சிலைகளை கரைக்க சென்றுள்ளார்கள். ஏரியில் தண்ணீர் குறைவாக உள்ள காரணத்தினால் சற்று உள்ளே சென்று கரைக்க முற்பட்டுள்ளனர். அப்போது ஆழத்தில் சிக்கி சிறுவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட மற்றொருவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விநாயகர் சிலைகளை கொண்டு சென்று கரைப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.