பண்ருட்டி: பண்ருட்டி 14அருகே வாலிபரைக் கொலை செய்து கோயில் வளாகத்தில் புதைத்துள்ளனர். அந்த உடல் இன்று காலை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கண்ணதாசன் (35). மனைவியை பிரிந்த இவர் தற்போது, வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருடன் மணிநகர் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்த பெண் மஞ்சுளா (25) என்பவரும் குடும்பம் நடத்தி வந்தார்.
லிங்காரெட்டிப்பாளையம் வேணுகோபால்சுவாமி கோயில் அர்ச்சகர் கோபிநாத். இவர் பிரபலமான ஜோதிடர். கோயில் எதிரில் இவரது வீடு உள்ளது. இங்கு மஞ்சுளா வீட்டு வேலை செய்து வந்தார்.
குடிப்பழக்கம் உள்ள கண்ணதாசன் அடிக்கடி அங்கு சென்று பிரச்னை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி கண்ணதாசனை செல்போனில் யாரோ தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதையடுத்து அவர் மஞ்சுளாவிடம் மளிகை கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மஞ்சுளா பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மிஸ்சிங் பிரிவில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுப்பேட்டை அரசூர் மெயின் ரோட்டில் எல்.ஆர்.பாளையத்தில் உள்ள கோயில் அருகில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் புதைக்கப்பட்டதாக நேற்று பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட கோயில் வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி மண்வெட்டி, கடப்பாரை, பைப் உள்ளிட்டவை இருந்தது. மேலும் ஓரிடத்தில் சிமென்ட் வைத்து பூசப்பட்டிருந்தது.
இதையடுத்து கோயில் அர்ச்சகர் கோபிநாத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் கண்ணதாசனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்டார். அவர் அளித்த தகவலின் பேரில், பண்ருட்டி தாசில்தார் உதயகுமார் முன்னிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு கண்ணதாசன் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்காதல் தொடர்பாக கொலை நடந்ததா? அல்லது கண்ணதாசன் தலைச்சன்பிள்ளை என்பதால் நரபலி கொடுக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அர்ச்சகர் கோபிநாத், அவரது உறவினர் ஒருவர், கள்ளக்காதலி மஞ்சுளா, பண்ருட்டி தனலட்சுமி நகரை சேர்ந்த கொத்தனார் சீனிவாசன்(58) உள்ளிட்டோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணை முடிவில் கொலைக்கான முழு காரணம் தெரியவரும். இச்சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.