மதுரை: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவலர்கள் இருவருக்கு ஜாமின் கொடுக்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். தற்போது இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரிக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாத்தான்குளம் ஏட்டு தாமஸ் பிரான்சிஸ், ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டருக்குரிய பணியை செய்கிறேன். சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டதில்லை. இச்சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. எனவே ஜாமின் அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதுபோல் கைதான காவலர் முத்துராஜ் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவலர் தாமஸ் பிரான்சிஸ் என்பவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சாதாரண கணினி இயக்குனர் மட்டுமே இருந்தார். இவ்வழக்கில் அவருக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று வாதிட்டார். சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.