×

சென்னைக்கு படையெடுக்கும் மக்கள் தொழிற்பேட்டை, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் தீவிர கண்காணிப்பு

* தொழிலாளர்களை 14 நாள் தனிமைப்படுத்த வேண்டும்
* விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற உத்தரவு

சென்னை: வெளிமாநில மக்கள் சென்னைக்கு அதிக அளவில் திரும்பி வருவதால் தொழிற்பேட்டை மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தனிமைப்படுத்துதலை கடுமையாக பின்பற்ற நகராட்சி நிர்வாக துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 7, 8, 10, 11 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணி தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கூடுதல் காவல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் பி.மதுசுதன் ரெட்டி, துணை ஆணையர்கள் கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் கூறியதாவது:  


சென்னையில் வைரஸ் தொற்று பரவுதல் வெகுவாக குறைந்துள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மற்றும் வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவசரத் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த இ - பாஸ் எளிமையாக்கப்பட்டு தகுந்த காரணங்கள் இருப்பின் உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையை நோக்கி வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக, 18ம் தேதி மட்டும் 18,853 மனுக்கள் பெறப்பட்டு அதில் 18,823 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பயண அனுமதி பெற்று வரும் நபர்களை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தொழிற்சாலை மற்றும் இதர அலுவலகங்களின் வேலை காரணமாக வரும் நபர்களின் தகவல்களை, மண்டல அலுவலர்கள் சேகரித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் வியாபார ரீதியாக வெளி மாவட்டங்களுக்கு சென்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.  

அதேபோன்று அம்பத்தூர் மண்டலம், கிண்டி தொழிற்பேட்டை அமைந்துள்ள அடையாறு மண்டலம் ஆகியவற்றில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், வெளிமாநில தொழிலாளர்கள் வருகையும் அதிகரிக்கும். இதுதொடர்பான தகவல்களையும் சேகரித்து அவர்களையும் முறையாக தனிமைப்படுத்த வேண்டும். மாநகராட்சியின் வழிமுறைகளை பின்பற்றாத நபர்களின் மீதும், வெளியிடங்களுக்கு வரும் போது முகக்கவசம் அணியாதவர்கள் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் மீதும் காவல்துறை உதவியுடன் சட்டப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Chennai ,occupation area , Chennai, invading people, industrial area, business establishments, area
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...