×

எஸ்ஐ தாக்கியதால் உயிரை விடுகிறேன்... வீடியோ வெளியிட்டு மந்திரவாதி தற்கொலை: வைரலாகும் மரண வாக்குமூலம்

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே எஸ்ஐ தாக்கியதால் மனமுடைந்த மந்திரவாதி, தற்கொலை செய்து கொண்டார். சேலம்  மாவட்டம் இடைப்பாடி அருகே புளியம்பட்டி குண்டாங்கல்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (42). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், பிளஸ்1 படிக்கும் மகளும், 8ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். மந்திரவாதியான இவரிடம் அமாவாசை மற்றும் விஷேச நாட்களில்,  இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் தேடிவந்து பல்வேறு நோய்கள் குணமாக வேண்டி தாயத்து மற்றும் மந்திரித்த கயிறு கட்டிச்செல்வார்கள். மேலும், அமாவாசை தினத்தன்று சரவணன் பேய் ஓட்டுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி மாலை சரவணன், பெண்  ஒருவருக்கு தாயத்து கட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தேவூர் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் மற்றும் போலீசார், அரை நிர்வாணத்தில் இருப்பதாக கூறி சரவணனை அடித்துள்ளனர். மறுநாள் முதல் சரவணனை காணவில்லை. இதனிடையே சரவணனின் மொபைலில் இருந்து, அவரது நண்பர்களின் மொபைலுக்கு வீடியோ ஒன்று வந்தது. அதில் பேசிய சரவணன், ‘என்னோட இந்த முடிவுக்கு, மன உளைச்சலுக்கு எஸ்ஐ அந்தோணி மைக்கேல்தான் காரணம். என்னை ரொம்ப அடிச்சதால மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன். என்னோட இந்த கஷ்டமான முடிவுக்கு வேற யாரும் காரணமில்ல.

அதிகார தோரணையில் எத வேணாலும் செய்யலாம்னு அந்தேணி மைக்கேல் அடித்தார். அத்தனை பேரையும் என் ஆன்மா சும்மா விடாது. அப்பா உன்கிட்டே வர்றேன்’ என பதிவிட்டிருந்தார். இதனால், அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடினர். இந்நிலையில், அவரது  வீட்டுக்கு அருகே காட்டுப்பகுதியில் பாறைகளுக்கு இடையே அழுகிய  நிலையில் நேற்று அவர் சடலமாக கிடந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். மந்திரவாதி வெளியிட்ட மரண வாக்குமூல வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : SI ,Wizard ,death ,suicide , SI attacked, killed, video released, witch suicide, viral death confession
× RELATED சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது