மதுரை: மதுரையில் கடனை திரும்ப செலுத்துமாறு தனியார் பைனான்ஸ் நிறுவத்தினர் நெருக்கடி கொடுத்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை மங்கலக்குடியை சேர்ந்தவர் சக்திவேல்(34). விவசாயி. ஆட்டோ வைத்து தொழிலும் நடத்தி வந்தார். இவர் வீடு கட்டுவதற்காக தனியார் பைனான்ஸ் நிறுவனத்திடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்டோ தொழில் முற்றிலும் முடங்கியது. விவசாயத்திலும் எதிர்பார்த்த லாபம் இல்லை. இதனால் கடனை முறையாக செலுத்த முடியவில்லை.
இந்நிலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தினர் கடனை திருப்பி செலுத்துமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சக்திவேல், நேற்று முன்தினம் வயலுக்கு சென்றவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்த சக்திவேலுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
* எஸ்ஐ பைக்கை பறித்ததால் விவசாயி தற்கொலை
ஊட்டி: ஊட்டி அருகே கெந்தோரை புதுவீடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (38). விவசாயி. இவர் கடந்த 15ம் தேதி மது அருந்தி விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த சப்.இன்ஸ்பெக்டர் லோகநாதன் அவரை தடுத்து நிறுத்தி, ரூ.15 ஆயிரம் அபராதமாக கேட்டுள்ளார். சீனிவாசனின் பைக்கையும் பறிமுதல் செய்தார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.