பெங்களூரு: கொரோனா பீதியால் இறந்தவரின் இறுதி சடங்கிற்கு உறவினர்கள் வராததால் மகன் தனது நண்பனுடன் சடலத்தை சைக்கிளில் வைத்து எடுத்து சென்ற சம்பவம் கித்தூரு தாலுகாவில் நடந்துள்ளது. பெலகாவி மாவட்டம் சென்னம்மா கித்தூரு தாலுகா எம்கே ஹூப்பள்ளி பகுதி காந்திநகரை சேர்ந்த முதியவர் கொரோனா பாதிப்புடன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனை செய்யாத நிலையில், நேற்றுமுன்தினம் அவர் வீட்டில் உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சடலத்தை எடுத்து செல்ல ஆம்புலனசை அழைத்தனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை. கொரோனா உறுதிபடுத்தப் படாததால், சுகாதாரத்துறை ஊழியர்களும் அடக்கம் செய்ய முன்வரவில்லை. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் உறவினர்களும் வரவில்லை.எனவே வேறு வழியில்லாமல், இறந்தவரின் மகன் தனது நண்பனின் உதவியுடன் சடலத்தை பிளாஸ்டிக் கவரால் சுற்றியுள்ளனர். கிராம பஞ்சாயத்து வழங்கிய பிபிஇ கிட் அணிந்து சைக்கிளில் சடலத்தை வைத்து கொண்டு மயானத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கு செய்துள்ளனர். இது குறித்து வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் டி.கே.சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.