×

45 வருடங்களாக மக்கள் சேவையாற்றிய 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் காலமானார்: வடசென்னை மக்கள் சோகம்

சென்னை: வடசென்னையில் கடந்த 45 வருடங்களாக ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்றிய 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் காலமானார். சென்னை வியாசர்பாடியில் வசித்த ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் திருவேங்கடம் (எ) வீரராகவன்(70). இவர், 1973ம் ஆண்டு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் முடித்து தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவருக்கு ப்ரீத்தி என்ற மகளும், தீபக் என்ற மகனும் மருத்துவராக உள்ளனர்.

ஆரம்ப காலகட்டத்தில் இப்பகுதியில் இலவசமாக மருத்துவம் பார்த்து வந்த இவர், பின்னர் ரூ.2 கட்டணத்திலும், ரூ.5 கட்டணத்திலும் மருத்துவம் பார்த்துள்ளார். பலருக்கு அந்த 5 ரூபாய் கூட இல்லாமல் இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார். ஏழை நோயாளிகளிடம் மருந்து மாத்திரைகளுக்கு பணம் வாங்காமல் மருத்துவம் பார்த்தார். இதனால், இவரை  அப்பகுதி மக்கள் 5 ரூபாய் டாக்டர் என்றே அழைத்தனர். தொடர்ந்து மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த இவர் நேற்று முன்தினம் மாலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இது அவரிடம் சிகிச்சை பெற்ற மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இவரது மனிதநேய பண்பை பாராட்டி தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

* தலைவர்கள் இரங்கல்
முதல்வர் எடப்பாடி: 5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் திருவேங்கடம் 15ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். அவர் வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரி பகுதியிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவச் சேவை அளித்திட வேண்டும் என்ற நோக்கில், சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு 2 ரூபாய்க்கு சிகிச்சை அளித்தார். பல ஆண்டுகளுக்கு பின்னர், 5 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு தனது இறுதி மூச்சு உள்ள வரை சிகிச்சை அளித்த சிறப்புக்குரியவர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ₹5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம். எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் டாக்டர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvenkadam ,North Chennai People ,Tragedy. 5 , 45 years, People's Service, 5 rupees Dr. Thiruvenkadam, passed away
× RELATED திருவேங்கடம் அருகே பயங்கரம் மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்