சாயல்குடி: கரூர், வையாபுரி நகரை சேர்ந்தவர் மதன்குமார் (43). இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரபாகு, முனியசாமி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும், ‘‘விமானங்கள் பறக்கும்போது அவற்றை ரேடியோ அலைகளிலிருந்து பாதுகாக்கும் இரிடியம் என்ற பொருளை தென்மாநிலங்கள் முழுவதும் விற்பனை செய்ய லண்டனை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதில் முதலீடு செய்தால் 40 நாட்களில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்’’ என மதன்குமாரிடம் கூறினர். இதை நம்பிய மதன்குமார் 2014ல் பல தவணைகளில் ரூ.6 கோடி வரை இவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தினார்.
சில மாதங்கள் கழித்து லாப தொகையை கேட்டுள்ளார். ஆனால் இருவரும் பணம் தராமல் இழுத்தடித்து வந்தனர். கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மதன்குமார் ராமநாதபுரம் எஸ்பி வருண்குமாரிடம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வீரபாகு, முனியசாமி, பாஸ்கரன், வீரபாகுவின் அண்ணன் சுகுமாறன் (48), அவரது தந்தை கணபதி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சுகுமாறனை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.