சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கவர்னர் மாளிகை வீட்டில் சிகிச்சை பெற்று வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குணமடைந்து விட்டதாக மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடந்த 2ம் தேதி லேசான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், கவர்னர் பன்வாரிலால் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு கடந்த 13 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலையை காவேரி மருத்துவமனை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தற்போது கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டார். இதுகுறித்து சென்னை, காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக கவர்னருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் (கொரோனா தொற்று இல்லை) என்று முடிவு வந்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு அவர் அளித்த முழு ஒத்துழைப்பால் விரைவாக குணமாகியுள்ளார்.