சென்னை: தமிழகத்தில் நீடித்து வரும் வெப்பச் சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று பந்தலூரில் 110 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோவை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யும் வாய்ப்பும் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.