சென்னை: வடதமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்குஆந்திர கடலோர பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் கடந்த 2 நாட்களாக நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதியில் நிலை கொண்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக நேற்று தேவாலாவில் 120மிமீ மழை பெய்தது. ஏற்காடு 100 மிமீ, வால்பாறைற 90 மிமீ, சின்னக்கல்லார் 80மிமீ, சின்கோனா,பந்தலூர் 70மிமீ,சோலையார் 50மிமீ மழை பெய்தது. வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில்நிலை கொண்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று சில இடங்களில்லேசான மழை பெய்யும்.