×

தளர்வில்லாத ஊரடங்கு காரணமாக மின் தேவையில் 2,500 மெகாவாட் சரிவு

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் தளர்வில்லாத ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த மின்தேவையில் 2,500 மெகாவாட் அளவுக்கு சரிவு ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்  தளர்வுகளின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் சிறிய, பெரிய கடைகள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள், பெட்ரோல் நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் செயல்படவில்லை.

இதனால் மின்நுகர்வு குறைந்தது. இதன்காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்த மின்தேவையில் 2,574 மெகாவாட் சரிந்தது. அதாவது கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை 12,811 மெகாவாட்டாக இருந்தது.
இதுவே தளர்வில்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 9ம் தேதி) தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை 10,237 மெகாவாட்டாக சரிந்திருந்தது. இவை இரண்டுக்குமான இடைவெளி 2,574 மெகாவாட் ஆகும். இதேபோல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு காரணமாக மின்சாரத்தின் பயன்பாடு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Relentless curfew, power demand, 2,500 MW, decline
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...