தாம்பரம்: தாம்பரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால் சாலை விரிவாக்க பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். தாம்பரம் காந்தி சாலை வழியாக, மேற்கு தாம்பரம், தர்காஸ், திருநீர்மலை, முடிச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், இச்சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினர்.
முதற்கட்டமாக காந்தி சாலையில் அமைந்துள்ள சேவாசதன் பள்ளி அருகில் சாலையை விரிவுபடுத்தும் நடைபெற்றன. ஆனால், இதற்கு இடையூறாக அமைந்துள்ள வீடுகள் மற்றும் கடைகள் அகற்றப்படாததால் சாலை விரிவாக்க பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதேபோல், விரிவாக்க பணிக்காக சாலையின் ஓரம் பள்ளம் தோண்டப்பட்டது. அதன் மேல் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. இதன் அருகே நடைபாதை அமைப்பதற்காக கற்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதியை தனியார் சார்பில் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசலால், இச்சாலை வழியாக செல்லும் அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.