சென்னை: அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஆம்னி பஸ் தொழிலை சார்ந்த 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சாலைவரியிலிருந்து விலக்கு வேண்டும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஆம்னி பேருந்து தொழில் மார்ச் 24ம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நலிவடைந்துள்ளது. இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ள ஏப்ரல், மே, ஜூன் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு சாலை வரி செலுத்த அரசு நிர்ப்பந்திக்கிறது. இந்த அசாதாரண சூழ்நிலையில் தொழில் முற்றிலும் முடங்கி இருப்பதால் எங்களால் சாலை வரி செலுத்த வழியில்லை.
அழிவின் விளிம்பில் நிற்கும் ஆம்னி பேருந்து தொழில் சார்ந்த 2 லட்சம் பேரையும், அவர்களைச் சார்ந்த குடும்பத்தாரையும் காப்பாற்ற அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுக்கும் மற்றும் அரசு பொது போக்குவரத்து அனுமதி அளிக்கும் நாளிலிருந்து அடுத்து வரும் 3 மாதங்களுக்கும் சாலைவரியிலிருந்து விலக்கு வேண்டும். ஆம்னி பேருந்து இயக்காத காலங்களுக்கு பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளுக்கு வாடகையும் மற்றும் இயங்காமல் நிற்கும் பேருந்துகளுக்கும் பார்க்கிங் கட்டணமும் வசூலிக்காமல் விலக்கு அளிக்க வேண்டும். ஆகையால் அரசு வட்டியில்லாமல் ஒரு வருட காலத்தவணையாக ஒவ்வொரு பேருந்திற்கும் 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
வங்கிகளுக்கு ஓர் ஆண்டிற்கான தவணைத்தொகை செலுத்துவதற்கு கால அவகாசமும் மற்றும் ஓர் ஆண்டிற்கான தவணைத்தொகை உள்ள வட்டியை தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்ய வேண்டும். சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து ஒரு வருடத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.