பந்தலூர்: சேரங்கோடு சின்கோனா டேன்டீ ஆலை தொழிலாளர் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டதால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். பந்தலூர் அடுத்த சேரங்கோடு சின்கோனா டேன் டீ ஆலை தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் 3 காட்டு யானைகள் நேற்று நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யானைகளை பார்த்த மாணவர்கள் மற்றும் குழந்தைகள் காட்டு யானைகளை கண்டு அலறி அடித்து ஓடினர். பொதுமக்கள் யானைகளை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘காட்டு யானைகள் ஒரு வாரமாக இப்பகுதியில் சுற்றித்திரிவதால் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாததால் யானைகள் நடமாட்டம் தெரிவதில்லை, சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும். குடியிருப்புக்குள் நுழையும் யானைகளை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.