×

வெற்றிகரமாக 2ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனைக்குள் நுழைந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வேக்சின்கள்..: ஐசிஎம்ஆர் இயக்குநர் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு கொரோனா வேக்சின்கள் வெற்றிகரமாக 2ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனைக்குள் நுழைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்(ஐசிஎம்ஆர்) இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, உலகளவில் 141 நிறுவனங்கள் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு கட்டத்தில் உள்ள நிலையில், இதில் 26 நிறுவனங்கள் தடுப்பு மருந்தின் முக்கியக் கட்டத்தில் உள்ளன. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து நமக்கு அவசியமாகவும், அவரசரமாகவும் தேவைப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அறிவியல் ரீதியாக மட்டுமல்லாமல், சமூகச் கலாச்சார மற்றும் ஒழுங்குமுறையிலும் சிறிது காலமாகும்.
 
தற்போதைய நிலையில் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியாவில் 3 நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இதில் இரு உள்நாட்டு நிறுவனங்கள் முதல்கட்ட கிளினிக்கல் பரிசோதனையை முடித்துள்ளன. அதாவது பாரத் பயோடெக் நிறுவனம், ஜைடெஸ் கெடிலா ஆகிய மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் முதல்கட்ட கிளினிக்கல் பரிசோதனையை 11 இடங்களில் முடித்து, 2வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை தொடங்கிவிட்டன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் பணியியில் இறங்கியுள்ள இந்தியாவின் சீரம் மருந்து நிறுவனம், அந்த தடுப்பு மருந்தின் 2வது மற்றும் 3வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்க அனுமதி பெற்றுள்ளது. அந்தப் பரிசோதனை 17 இடங்களில் ஒரு வாரத்திற்குள் நடக்கவுள்ளது. நமக்கு கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் வரை, சமூக விலகலைக் கடைபிடித்தல், முக்ககவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற பழக்கங்களை நாம் தொடர வேண்டும், என கூறியுள்ளார்.


Tags : ICMR ,India ,Corona ,trials ,phase ,trial , ICMR, Corona, Vaccine, Balram Bargawa, India
× RELATED ‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’;...