சென்னை: சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் மெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டு, திருத்தணி பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், சின்னக்கலார், பந்தலூர் பகுதிகளில் தலா 6 செ.மீ மழையும், தேவலா, ஆர்.கே. பேட்டை பகுதிகளில் தலா 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், வால்பாறை, சோளிங்கர், சோலையார், பிறையார் எஸ்டேட், சேருமுல்லை பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
* ஆகஸ்டு 2(இன்று) முதல் ஆகஸ்டு 6ம் தேதி வரை, மன்னார்வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
* ஆகஸ்டு 2ம் தேதி, மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்திலும், கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
* ஆகஸ்டு 3 முதல் 6ம் தேதி வரை, கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50-60 கி.மீ வேகத்திலும், மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
* ஆகஸ்டு 2 முதல் 5ம் தேதி வரை, அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
* ஆகஸ்டு 4ம் தேதி, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
* ஆகஸ்டு 5, 6ம் தேதிகளில் வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
* ஆகஸ்டு 2 முதல் 6ம் தேதி வரை, தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு அரப்பிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தென்தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 03.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் அலை 3.5 முதல் 3.9 மீட்டர் வரை எழும்பக்கூடும், என குறிப்பிடப்பட்டுள்ளது.