மதுரை: என் 95 மாஸ்க் இறக்குமதி செய்வதாக கூறி, மதுரை டாக்டரிடம் ரூ.2.55 மோசடி செய்த வெளிநாட்டை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்தவர் டாக்டர் சந்திரமோகன். அப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் என்-95 முகக்கவசம் வாங்க திட்டமிட்டார். இணையதளம் மூலம் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தை அணுகினார். கடந்த ஜூன் மாதம் 5 லட்சம் முகக்கவசங்களுக்கு ஒப்பந்தம் போட்டு ஆர்டர் கொடுத்தார். இதன் மதிப்பு ரூ.2.25 கோடி என விலை நிர்ணயம் செய்து, முன்பணமாக ரூ.1.60 கோடியை வழங்கினார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்ததுபோல், முகக்கவசத்தை வழங்காமல் ஏமாற்றியது.
இதுகுறித்து டாக்டர் சந்திரமோகன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் நேற்று அந்த நிறுவனத்தின் விற்பனை பிரிவை சேர்ந்த பேட்ரிக் வேன் டிக், மேலாளர் டாக்டர் பீட்டர் பாத் மற்றும் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நெதர்லாந்து மட்டுமின்றி, கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றை தேர்வு செய்து, அதில் 2 லட்சம் மாஸ்க்குகளுக்கு ஒப்பந்தம் செய்தார். அதிலும் முதற்கட்டமாக ரூ.90.65 லட்சத்தை முன் பணமாக செலுத்தி உள்ளார். அதனை பெற்றுக்கொண்டு அந்த நிறுவனமும் மாஸ்க் வழங்காமல் மோசடி செய்து விட்டது.
இதுகுறித்து புகாரின்பேரில் கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் சூரியநாராயணன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்திய தூதரகத்திலும் 2 நிறுவனங்கள் மீது புகார் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.