திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் கேட்டு, கொச்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகை ஒருவர், கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது முன்னாள் டிரைவர் பல்சர் சுனில் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், பிரபல நடிகர் திலீப் இதற்கான சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து. அவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கை ஹனி வர்க்கீஸ் என்ற பெண் நீதிபதி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி கடந்தாண்டு நவம்பரில் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. இதன்படி கடந்த மே மாதமே விசாரணையை முடித்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா ஊரடங்கால் விசாரணை நடத்த முடியாமல் போனது. எனவே, விசாரணையை முடிக்க மேலும் 6 மாதங்கள் அவகாசம் அளிக்கும்படி நீதிபதி ஹனி வர்க்கீஸ், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இது வரும் 4ம் தேதி விசாரணைக்கு வருகிறது.