×

மருந்து கடைக்காரரை மிரட்டிய விவகாரத்தில் பிரபல ரவுடி சுற்றி வளைத்து கைது: செல்போன் சிக்னலை வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்தவர் வினோத் (45). அதே பகுதியில் மருந்து கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பரசன், வினோத்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது, மருந்து கடை நடத்த வேண்டுமானால், ₹50,000 மாமூல் தர வேண்டும் என மிரட்டினார். இந்த செல்போன் ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து வினோத், ஓட்டேரி போலீசில் புகார் அளித்தார். மேலும் வியாபாரிகள் சங்கம் சார்பில், செங்கல்பட்டு எஸ்பி கண்ணனிடம் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசனை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் இருந்து ரவுடி சிலம்பரசன், ஆந்திராவுக்கு தப்பி செல்ல இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், மாறு வேடத்தில் நேற்று காலை அங்கு சென்று, தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு வந்த சிலம்பரசனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடம் இருந்து, ஒரு கத்தி, 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வண்டலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன், கூறுகையில், ரவுடி சிலம்பு (எ) சிலம்பரசன், 2 முறை குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் இருந்தான். கடந்த 22ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த சிலம்பரசன், ஓட்டேரியை சேர்ந்த மருந்து கடைக்காரர் வினோத்திடம், மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் 3 தனிப்படைகள் அமைத்து தேடினோம்.

அப்போது, இரும்புலியூரில் இருந்து ஆந்திராவுக்கு லாரியில் தப்பி செல்ல முயன்ற அவனை, செல்போன் டவரை வைத்து தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மருந்து கடைக்காரர் அளித்த புகாரின்படி, 48 மணி நேரத்தில் ரவுடியை சுற்றி வளைத்து கைது செய்துள்ளோம். ரவுடி சிலம்பரசனை குண்டர் சட்டத்தில் அடைப்போம்’ என்றார்.

Tags : Celebrity ,pharmacist , Drug dealer, intimidation, celebrity rowdy, arrest, cell phone, police
× RELATED கடைகளில் மருந்துகள் விற்பதை தடை செய்ய வேண்டும்