ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் வந்த ரூ.9ஆயிரத்தை பள்ளி ஆசிரியர் போலீசில் ஒப்படைத்தார். அவரை பொதுமக்கள் பாராட்டினர். ஆண்டிமடம் அடுத்த அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் (50), திராவிடநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை ஆண்டிமடத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம் மையம் ஒன்றில் பணம் எடுக்க சென்றார். இயந்திரத்தில் கார்டை சொருகி தனக்கு தேவையான தொகை ரூ.8 ஆயிரத்தை டைப் செய்துள்ளார். அப்போது இயந்திரத்தில் இருந்து முதலில் கசங்கிய நிலையில் ஒரு ரசீது வந்துள்ளது. தொடர்ந்து பணமும் வந்துள்ளது.
தொகையை சரி பார்த்தபோது ரூ.9 ஆயிரம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமன் மீண்டும் மிஷினில் தனது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். அப்போது ஆயிரம் மட்டுமே வந்தது. சந்தேகமடைந்து அவரது கணக்கில் இருந்த இருப்பு தொகையை சரி பார்த்தபோது பணம் ஏதும் குறையாமல் ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கப்பட்டது தெரியவந்தது.
பின்னர் மீண்டும் தனது இருப்புத் தொகையை சரி பார்க்கையில் ஆயிரம் போக மீதம் கணக்கில் அப்படியே இருந்துள்ளது. இதனால் அது வேறொருவரின் பணம் என தெரிந்ததால் ஆசிரியர் ராமன் ஆண்டிமடம் காவல்நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முஹம்மது இத்ரீஸிடம் ரூ.9ஆயிரத்தை ஒப்படைத்தார். பெயருக்கு ஏற்றார் போல் பணத்தை ஒப்படைத்த ஆசிரியரின் நற்பண்பை யும் நேர்மையையும், போலீசார்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அவரை பாராட்டினர்.