சென்னை: இந்திய அளவில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்தது. தற்போது ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன் இணைந்து நடிக்கும் ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், கெரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட ராஜமவுலி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதுகுறித்து நேற்றிரவு ராஜமவுலி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘சில தினங்களுக்கு முன் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது.
அது தானாகவே சரியாகி விட்டாலும், மருத்துவமனைக்கு சென்று எங்களை பரிசோதித்துக் கொண்டோம். நேற்று வெளியான பரிசோதனை முடிவில், லேசான கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டோம். தற்போது நலமாக இருக்கிறோம் என்றாலும், அனைத்து மருத்துவ விதிமுறைகளை பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவான பிறகு பிளாஸ்மா தானம் செய்ய முன்வருவோம்’ என்று தெரிவித்துள்ளார்.