புதுடெல்லி: தமிழ்நாடு, டெல்லி, உத்தரகாண்ட் அணிகளுக்காக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஆல் ரவுண்டர் ரஜத் பாட்டியா (40), ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2003-04 சீசனில் தமிழக அணிக்காக களமிறங்கிய ரஜத், பின்னர் டெல்லி அணிக்கு மாறினார். 2018-19 ரஞ்சி சீசனில் அறிமுக அணியான உத்தரகாண்ட் சார்பில் களமிறங்கி, அந்த அணி கால் இறுதி வரை முன்னேற காரணமாக இருந்தார். அவர் இதுவரை 112 முதல்தர போட்டிகளில் விளையாடி 6482 ரன் (சராசரி 49.10) குவித்துள்ளதுடன், 137 விக்கெட் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஹவாய் கல்லூரி ஒன்றில் பயோ-மெகானிக்ஸ் படித்துள்ள ரஜத், ‘இளம் வயதில் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் காயம் அடைவது வழக்கம். உடல் தன்மைக்கு ஏற்ப பயிற்சி செய்தால் இதை தவிர்க்கலாம். அவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட முடிவு செய்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.