×

கொரோனா ஊரடங்கினால் கடந்த 4 மாதங்களில் ரூ.30,000 கோடி பி.எப் பணம் வெளியே எடுப்பு

மும்பை: கொரோனா ஊரடங்கினால் வேலையிழப்பு, சம்பள குறைப்பு போன்றவற்றால் ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் ரூ.30,000 கோடி பி.எப் கணக்கிலிருந்து பயனாளிகள் வெளியே எடுத்துள்ளனர். வருங்கால வைப்பு நிதி நிறுவனம் 6 கோடி சம்பளதாரர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களிடமிருந்து கட்டாய பங்களிப்பின் மூலம் பெறப்பட்ட ரூ.10 லட்சம் கோடி நிதியை நிர்வகிக்கிறது. கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கொரோனா சூழலால் பி.எப் கணக்கிலிருந்து எளிதில் பணம் எடுக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான காலத்தில் 80 லட்சம் பயனாளிகள் ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை வெளியே எடுத்துள்ளனர். மிகப்பெரிய அளவில் நிதி வெளியே சென்றிருப்பது 2021 நிதியாண்டின் வருவாயை பாதிக்கும். கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால், திரும்பப் பெறுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சில நாட்களில் கிட்டத்தட்ட ஒரு கோடி பயனாளிகள் சேமிப்பிலிருந்து விலகுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது எடுக்கப்பட்டுள்ள பணத்தில் 30 லட்சம் பேர் கொரோனா சூழலால் ரூ.8000 கோடியை திரும்ப பெற்றுள்ளதாகவும், மீதம் ரூ.22,000 கோடியை 50 லட்சம் பேர் பொதுவான காரணங்கள் கூறி பெற்றிருப்பதாகவும் பிஎப் நிறுவனம் தெரிவித்துள்ளது.



Tags : corona curfew corona , corona, pf
× RELATED கொரோனா ஊரடங்கில் தலைதூக்கும் கந்து...