மதுரை: மதுரையில் 101 வகை உணவு வகைகளுடன் மாமியார், மருமகளுக்கு விருந்து கொடுத்து அசர வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் செய்தித்தாள், வலைத்தளங்களில் ஆந்திராவை சேர்ந்த ஒரு மாமியார், வீட்டுக்கு வரும் மருமகனை வரவேற்க 67 வகை உணவு வகைகளை படைத்த செய்தி வந்தது. அதை படித்த நிறைய ேபரோட ‘மைண்ட் வாய்ஸ்’, ‘‘ச்சே... ஆந்திராவுல பொண்ணு எடுக்காம விட்டோமே’’ என்பதுதான். ஆந்திராவுலதான் அப்படி செய்வாங்களா? ஏன் நாங்க எல்லாம் தூங்கா நகரமான மதுரக்காரங்க.... நாங்க அசத்த மாட்டோமா என களமிறங்கி விட்டது ஒரு குடும்பம். இம்முறை மெகா விருந்து மருமகனுக்கு அல்ல... மருமகளுக்கு.. வழங்கியது மாமியார். நம்ப முடியலைல... நம்பித்தான் ஆகணும்.
மதுரை மாவட்டம், மூன்றுமாவடி பகுதியை சேர்ந்த அஹிலா - அபுல்கலாம் தம்பதியரின் மகன் அபுல்ஹசனுக்கும் ஷப்னாவுக்கும் கடந்த 9ம் தேதி திருமணம் நடந்தது.. விருந்துக்காக உறவினர்கள், புதுமண ஜோடியை வளைச்சு, வளைச்சு கூப்பிட்டிருக்காங்க... இங்கேதான் ஊரடங்கால இ-பாஸ், கொசு பாஸ்னு ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கே... யார் வீட்டுக்கும் போக முடியாம, புதுமண ஜோடி வீட்லயே சோகமாக இருந்திருக்காங்க...
இதை பார்த்த மாமியார், ‘ஏன் நம்ம மருமகளுக்கு, ஒரு ஸ்பெஷலான விருந்து நாமளே தரக்கூடாது’ன்னு யோசிச்சுருக்காங்க... உடனே களத்துல இறங்கி, மட்டன் பிரியாணி, பிரைட் ரைஸ், சிக்கன் வறுவல், சுக்கா, மீன், முட்டை, காடை, லெமன்சாதம், புளியோதரை, தயிர் சாதம், ஆம்லேட், புரோட்டா, சப்பாத்தி என தொடங்கி அனைத்து வகையான சூப்கள், பழ ஜூஸ்கள் முதல் அப்பளம் வரை 101 வகையான உணவுகளை முழு மூச்சாக மாமியார் தயாரிச்சுட்டாங்களாம்...
(நம்ம மாமியார் கண்ணுல இந்த நியூஸ் படணும்னுதானே நினைக்குறீங்க... கண்டுபிடிச்சுட்டோம்ல...). பார்த்து, பார்த்து செஞ்ச 101 வகை உணவு வகைகளையும், நீண்ட இலையில் வைத்து, தானே மருமகளுக்கு ஊட்டியும் விட்டுருக்காங்க... மாமியாரின் இந்த மெகா விருந்தை கண்டு மருமகள் மட்டும் இல்லைங்க... கேள்விப்பட்டவங்களும் மெய்சிலிர்த்து பூரிச்சு போய்ட்டாங்களாம்... மாமியார் - மருமகள் என்றால் எலியும், பூனையுமாய் இருந்த காலம் போய், இப்படி அன்பு ‘பரிமாறும்’ கூட்டணியாகவும் திகழ்வது ஆச்சரியப்படுத்துகிறது தானே...? கொரோனா எவ்ளோ மாற்றத்தை கொண்டு வருது பாருங்க...!