நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் வெற்றிவேல், ராமசாமி, சக்கரவர்த்தி ஆகிய மூன்று மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 நாட்டிகள் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை மீனவர்கள் என்ற போர்வையில் அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை வழிமறைத்துள்ளனர்.
மேலும் அங்குள்ள மீனவர்களை ஈட்டி, கத்தி, வீச்சு உள்ளிட்ட கடுமையான ஆயுதங்களை கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கியுள்ளனர். தொடர்ந்து கம்புகளை கொண்டும் மீனவர்களை கடற்படையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 2 மீனவர்களுக்கு பலத்த காயமடைந்துள்ளது. பின்னர், மீனவர்களை தாக்கியதோடு மட்டுமின்றி அவர்களிடம் இருந்து ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி மற்றும் மீன்கள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு விரட்டியுள்ளனர்.
கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த பாரதிதாசன் என்ற மீனவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் தாக்கப்பட்டது தமிழக மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.