×

சமூக வலைத்தளங்களில் பெண்கள் புகைப்படங்களுடன் ஆபாச பதிவு!: மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

சென்னை: சென்னையில் முகநூலில் கணக்கு வைத்திருக்கும் பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அம்பத்தூரை சேர்ந்த ஒருசில பெண்களின் கைபேசிகளுக்கு இரவு நேரங்களில் அடுத்தடுத்து புதிய எண்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் மறுபுறம் பேசும் மர்மநபர்கள் அந்த பெண்களுடன் தவறான நோக்கத்துடன் பேசி தினமும் தொல்லையை தருவதாக சென்னை மேற்கு மண்டல இணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களின் புகைப்படங்களை யாரோ சிலர் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் என்று தவறாக சித்தரித்து கைபேசி எண்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் தவறான பதிவுகளை பார்த்து மர்மநபர்கள் தினமும் தொல்லை தருவது மன உளைச்சலை உண்டாக்குவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டுள்ள மர்மநபர்களை அம்பத்தூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்ததாவது, ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 முறை தொலைபேசியில் மர்மநபர்கள் தொடர்பு கொண்டு தங்களை தகாத முறையில் ஆபாசமாக பேசுகின்றனர். இதனால் தங்களுக்கு மிகுந்த மனவேதனை ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளோம். விரைந்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : women , Social Websites, Women, Porn Post, Mystery People
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ