×

வெப்பச்சலனம் காரணமாக பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். குறிப்பாக, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி், நாகப்பட்டினம் மாவட்டங்கின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை(27.07.2020) கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெயக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ஊத்தங்கரை, ஏற்காடு பகுதிகளில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், புதுக்கோட்டை, செய்யூரில் தலா 7 செ.மீ மழையும், பெங்கலூர், லப்பைக்குடிக்காடு, கீழ் அணை, மேட்டூர், கிழச்செருவை பகுதிகளில் தலா 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், கீரனூர், நத்தம், சீர்காழி, ஆத்தூர், மருங்காபுரி, சிதம்பரம், திருவாலாங்காடு பகுதிகளில் தலா செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூலை 26ம்(இன்று) தேதி, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 27ம் தேதி, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 28ம் தேதி, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்திலும், தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். ஜூலை 29ம் தேதி தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 29 மற்றும் 30ம் தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான்ற கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Tags : Chennai Meteorological Department ,districts ,Salem ,warming ,Perambalur , Convection, Perambalur, Salem, Thunder, Heavy rain, Chennai Meteorological Center
× RELATED தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில்...