மதுரை: மதுரையை சேர்ந்த செல்வராஜ் ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் அவருக்கு சிறுநீரகம் செயலிழந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக 10 லட்ச ரூபாய் வரை செலவு செய்துவிட்ட நிலையில் மேற்படி மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதற்கிடையே அவர் பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. பெங்களூருக்கு வாகனத்தில் செல்ல கூட வழியின்றி தவித்துள்ளார். பின்னர் சிகிச்சைக்குச் செல்ல உதவி கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி லட்சுமி மனு அளித்துள்ளார். இதனையடுத்து அவரை உடனடியாக அழைத்து செல்வதற்காக ரெட் கிராஸ் அமைப்பினரிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மதுரை ரெட் கிராஸ் அமைப்பினர் ராணுவ வீரருக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுத்து அவரை சிகிச்சைக்காக பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.