சென்னை: சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அடங்ய அமர்வு கடந்த முறை விசாரித்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. திருத்தணிகாசலம் தரப்பில், சித்த மருத்துவம் முறையாக படிக்கவில்லை என்றாலும், பரம்பரை வைத்திய முறை மற்றும் பணியாற்றிய அனுபவம் உள்ளது. கொரோனாவுக்கு எதிராக சித்த மருந்தை தான் கண்டுபிடித்துள்ளார். அதன் மூலப்பொருட்கள் குறித்தும் மத்திய அரசின் ஆயுஷ் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பிய கடிதம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்ட்ட நீதிபதிகள், சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவதை வரவேற்றோம். சித்த மருத்துவத்தில் அனுபவ அறிவை வைத்துக் கொண்டு உரிய அங்கீகாரமோ, தகுதியோ பெறாத நிலையில் திருத்தணிகாசலத்தை மருத்துவராக எப்படி ஏற்க முடியும். அரசின் கொள்கை முடிவுகளை எடுக்க கூடிய பொறுப்பில் இருக்கும் முதலமைச்சரை பற்றி சமூக ஊடகங்களில் அவதூறாக விமர்சிப்பது ஏற்புடையதா? குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரும் மனுவில் தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றனர். பின்னர், திருத்தணிகாசலம் கண்டுபிடித்ததாக கூறும் கொரானா தடுப்பு மருத்து குறித்த விண்ணப்பத்தில் எடுத்த நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.