சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே தூய்மை பணி மேற்கொண்டு வரும் தொழிலாளர்களுக்காக சென்னையை சேர்ந்த பெண்கள் சமூக நல அமைப்பினர் வெட்டிவேரால் ஆன முககவசத்தை தயாரித்து வழங்கி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, குஜராத், மராட்டியம், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் வெட்டிவேரால் ஆன முககவசத்தை வழங்க அந்த அமைப்பினர் முடிவு செய்தனர். அதற்காக வெட்டிவேர் உள்ளடக்கிய சுமார் 10 ஆயிரம் முகக்கவசங்களை தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.
இதுகுறித்து அந்த அமைப்பினர் தெரிவித்ததாவது, வெட்டிவேர் முகக்கவசம் உபயோகிப்பதால் உடலில் வெப்பம் தணிந்து, இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொரோனா காலத்தில் வேலையின்றி தவிக்கும் 25 குடும்பங்களுக்கு இந்த பணி வழங்குவதால் அவர்கள் பொருளாதார ரீதியில் பயன்பெறுவர் என குறிப்பிட்டார். தொடர்ந்து, சென்னையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வெட்டிவேர் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. அதனை அணிந்து பணியாற்றும் போது புத்துணர்ச்சி கிடப்பதாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெட்டிவேரால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதே அவர்களின் நம்பிக்கை. யாரையும் எளிதாக தாக்கும் கொரோனா வைரசுக்கு இடையே, தினசரி தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு வெட்டிவேர் முகக்கவசம் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. விரைவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இன்னும் நிறைய வெட்டிவேர் முகக்கவசங்களை வழங்கவிருப்பதாக பெண்கள் சமூக நல அமைப்பினர் கூறியுள்ளனர்.