திருமலை: ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் அமைச்சரவையில் புதிதாக 2 அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆந்திர மாநில வருவாய் துறை அமைச்சராக இருந்த பில்லி சுபாஷ் சந்திரபோஸ், மீன்வளத்துறை அமைச்சராக இருந்த மோபிதேவி வெங்கட்ரமணா கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதனால், காலியாக இருந்த இந்த 2 அமைச்சர் பதவி யாருக்கு கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பலாசா தொகுதி எம்எல்ஏ சித்திரி அப்பலராஜு, கிழக்கு கோதாவரி மாவட்டம், ராமச்சந்திராபுரம் தொகுதி எம்எல்ஏ சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ராஜ்பவனில் உள்ள தர்பார் கூட்ட அரங்கில் கவர்னர் பிஷ்வ பூஷண் ஹரிச்சந்திரன் நேற்று பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.