×

தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் புற்றுநோய்க்கான தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. பிரபல மருத்துவமனை என்பதால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் மருத்துவமனையில் உள்ள தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர் ‘உங்கள் மருத்துவமனையில் நான் வெடி குண்டு வைத்துள்ளேன். இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் முடிந்தால் எடுத்து கொள்ளுங்கள்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனையின் வரவேற்பு அறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி உடனே வெடிகுண்டு மிரட்டல் குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் படி போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் மருத்துவமனைக்கு வந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு எந்த சந்தேகம் வராதபடி கார் பார்க்கிங் முதல் மருத்துவமனை முழுவதும் சோதனை நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் படி, மருத்துவமனை தொலைபேசிக்கு வந்த செல்போன் நம்பரை வைத்து போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

Tags : hospital , Denampet, private hospital, bomb threat, to mysterious person, police web
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி...