×

இரு சக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு

திருச்செங்கோடு : திருச்செங்கோட்டில் நேற்று முன்தினம் இரவு  சுமார் இரண்டு மணி நேரம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. திருச்செங்கோடு உழவர் சந்தை எதிரில் உள்ள சாலையில் சேலம் ரோடு, நாமக்கல் ரோடு மற்றும் கோழிக்கால் நத்தம் ரோடு பகுதியில், மழைநீர் வெள்ளம் போல் வந்து  சாக்கடையில் கலந்தது. அப்போது ஒருவர் இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்தார். அவரை மழை வெள்ளம் வண்டியுடன் இழுத்து  சாக்கடையில் தள்ளியது. இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்க முயன்றனர்.  

ஆனால் வெள்ளம் அதிகமாக இருந்ததால், சாக்கடையில் அவர் இழுத்துச்  செல்லப்பட்டார். இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் தேடி, இருசக்கர வாகனத்தை மட்டும் மீட்டனர். இரவு நேரம் என்பதாலும், மின்சாரம் துண்டிக்கபட்டதாலும் அவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது. இதையடுத்து நேற்று காலை தீயணைப்புத்துறையினர் அவரை தேடினர்.

ஆழமான சாக்கடையிலும், மழை வெள்ளம் சென்ற பாதையிலும் தேடிய அவர்கள்,  மழைநீர் சேகரமாகும் அம்மன் குளத்தில் அவர் சடலமாக மிதப்பதை கண்டனர். பின்னர் பலியானவரின் சடலத்தை பரிசல் மூலம் சென்று மீட்டு வந்தனர். இதையடுத்து இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் உயிரிழந்தவர் திருச்செங்கோடு அருகே ஒக்கிலிபட்டி கிராமம் சக்தி நகரை சேர்ந்த முருகேசன் (50). என்ற விவசாய கூலி தொழிலாளி என்பது தெரிய வந்தது.

இவருக்கு வீரம்மாள் (47) என்ற மனைவியும், கலைமணி (26) என்ற மகளும், பூவரசன் (24) என்ற மகனும் உள்ளனர். இதையடுத்து திருச்செங்கோடு நகர போலீசார், முருகேசன் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப்பின்னர் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Recovery ,mercenary ,Wheeler ,tiruchencode body , Two Wheeler,flooded ,tiruchencode ,employee found
× RELATED டூவீலர் திருட்டு