×

வேலூர் பெண்கள் சிறையில் துணியால் கழுத்தை இறுக்கி நளினி தற்கொலை முயற்சி

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். நளினிக்கும் அவரது அறைக்கு அருகில் உள்ள மற்றொரு பெண் கைதிக்கும் கடந்த 3 நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சிறையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மீண்டும் நளினிக்கும், அந்த கைதிக்கும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறை பாதுகாப்பு போலீசார் அவர்களை விலக்கி விட்டனர். இதையடுத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிய நளினி, அறையில் இருந்த துணியை எடுத்து தனது கழுத்தில் 2 சுற்றுகள் சுற்றி இறுக்கிக் கொண்டாராம்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த சிறை போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து சிறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், நளினிக்கு அருகில் உள்ள அறையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கொலை கைதி ராதா தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு திடீரென இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நளினி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர். இருவருக்கும் எதனால் பிரச்னை ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவரும் சந்தித்து கொள்ளாதபடி அறைகள் மாற்றப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : Nalini ,suicide ,Vellore Women's Prison , Vellore, Women's Prison, Nalini, Suicide attempt
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை