சென்னை: சென்னைக்கு விமானங்களில் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் இறுதி வாரத்தில் இருந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 2 மாதங்கள் இடைவெளிக்கு பின்பு மே 25ம் தேதி முதல் குறைந்தளவு உள்நாட்டு விமான சேவைகள் இருந்தது. ஆனாலும் சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் விமானப் பயணிகள் கூட்டம் அதிகமாகவும், சென்னைக்கு வரும் விமானங்களில் மிகவும் குறைவாகவே இருந்தன. இந்நிலையில், சென்னையைவிட மற்ற மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவ தொடங்கியது. அதேபோல் தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிலும் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து இம்மாத முதல் வாரத்தில் இருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. ஆனாலும் பயணிகளின் புறப்பாடை விட, வருகையில் குறைவாகவே இருந்தது. ஆனால், நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பயணிகளை விட, வருகை பயணிகள் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள், மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 28 விமானங்களில் பயணிக்க சுமார் 2,300 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் சென்னைக்கு வரும் 28 உள்நாட்டு விமானங்களில் 2,600 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதுதான் பயணிகளின் வருகைக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.