×

கல்வித்திட்டத்தை உரிய வகையில் மாற்றினால் குளறுபடிகள் தீரும்: ம.ராசேந்திரன், தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்

கல்வி என்பது மாணவரின் 3வது கண்ணைத் திறப்பது. அதாவது நெற்றிக்கண்ணை அல்ல, அறிவுக் கண்ணை திறப்பது. அந்த கல்வியை கற்பிக்கும் இடம், என்ன  பாடம் கற்பிக்கப்படுகிறது, கற்பிக்கும் ஆசிரியர், கற்பிக்கும் முறைகள், தேர்வு முறைகள் கட்டமைக்கப்படுகிறது. நாட்டுக்கு மாணவர்கள் ஆற்றவேண்டிய தேவை என்னவோ அவற்றை அவர்கள் செய்வதற்கான கல்வியை  கற்பிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கையில்தான் கல்வி இருக்கிறது. அதை அந்த அரசுகள், மக்களுக்கு அளிக்க வேண்டுமே ஒழிய தங்கள் நலனுக்காக பயன்படுத்த கூடாது. மக்களுக்கு கல்வியை வழங்க வேண்டியவர்களே என்ன வகையில் கல்வியை கொடுக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்யும் அதிகாரத்தையும் வைத்துள்ளனர்.

நாட்டு நலனுக்காக இருக்க வேண்டிய கல்வி வணிக மயமாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள், குழப்பமான நிலை உள்ளது.
தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையும் வளர்ந்து விட்டது. அதற்கேற்ப கல்வித் திட்டத்தை மாற்றிஅமைக்க வேண்டும். கல்வியை வணிகப் பொருளாக மாற்றிவிட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கான கல்வியை பயிற்றுவிக்காமல், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏற்ற பணியாளர்களை உருவாக்கிக் கொடுக்கும் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன.

அதன் விளைவுதான் புதிய கல்விக் கொள்கை, நீட் போன்றவை வந்தன. மேலும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதில் தொடங்கி, பாடநூல் தயாரிப்பது என்று எல்லாவற்றிலும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இப்போது புதிய பாடத்திட்டம் என்பதில் குளறுபடி, தேர்வு முறையில் குளறுபடி என்று எல்லாவற்றிலும் குளறுபடிகள்தான். இதனால் மாணவர்கள் பெரிதும் குழம்பிப் போய் உள்ளனர். நீட் என்ற புதிய திட்டம் வந்ததால் மக்கள் குழம்பியுள்ளனர். இதனால் கல்வியில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சி என்பது இல்லை. இதுபோன்ற பிரச்னைகள் உலக அளவில் ஏற்படும் போது உலக நாடுகளில் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை இங்குள்ளவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கல்வியில் தன்னாட்சியை கொண்டு வர வேண்டும்.

இங்கு அப்படி இல்லை. வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்கு கல்வியை திணித்து வரும் நிலை உள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சிஅடைந்த காரணத்தால் எந்த இடத்தில் இருந்தும் பணியாற்றும் நிலை இன்று உருவாகியுள்ளது. இதை உணர்ந்து மாறி வரும் சூழலுக்கு ஏற்ப கல்வியை தர வேண்டும்.  அப்போதுதான் மாணவர்களுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதை விட்டு மொழி போன்ற திணிக்கும் சிக்கல்களை உருவாக்கக் கூடாது.  புதிய பாடத்திட்டம் என்ற பெயரில் புதிய செய்திகளையும்  திணித்தல் கூடாது. வெளிநாடுகளில் உள்ளது போல கல்விக்காக தனியாக வல்லுநர் குழுக்களை உருவாக்க வேண்டும். என்ன பாடத்திட்டம் தேவை என்பதை அந்த குழுக்கள் தீர்மானிக்கும் வகையில் விட்டுவிட வேண்டும்.  இதுபோன்ற விஷயங்கள் ஆசிரியர்களால்தான் முடியும்.

தொல்காப்பியத்தில், 32 உத்திகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதில் வந்தது, கொண்டு வராதது உரைத்தல் என்பது ஒரு உத்தி. இதன்படி பழைய கல்விமுறையை வைத்துக் கொண்டு இனி வரும் காலத்தில் கல்வியில் என்ன தேவை என்பதை உணர்ந்து கல்வியில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் கல்வியில் உள்ள குளறுபடிகள் தீர வாய்ப்புள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ந்து  விட்டது. அதற்கேற்ப கல்வித் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். கல்வியை  வணிகப் பொருளாக மாற்றிவிட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கான கல்வியை  பயிற்றுவிக்காமல், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏற்ற பணியாளர்களை  உருவாக்கிக் கொடுக்கும் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன.

* முறையாக திட்டமிடாததால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி:  தங்கம் தென்னரசு, திமுக முன்னாள் அமைச்சர்
தமிழகத்தில் கடந்த 10 வருடங்களாக கல்வித்துறையில் புதியதாகவும், முக்கியத்துவமாகவும், மாணவர்களுக்கு பயனுடையதாகவும் எந்தவித புதிய மாற்றங்களையும் அரசு கொண்டுவரவில்லை. எல்லாம் வெறும் அறிவிப்புகளின் தோரணங்களாகவே இருக்கிறது. எந்த அறிவிப்புகளும் எந்தவிதமான முறையான திட்டமிடலோ ஆராய்ந்து தெளிந்து எடுத்த நடவடிக்கைகளாகவோ இல்லை. வெறுமனே அந்த நேரத்திற்காக, எதையும் யோசிக்காமல் செய்வது, ஊடகங்களுக்கு தெரிவிப்பது, அந்த அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு வரும்போது, அதனை ரத்து செய்வது. இதுதான் பள்ளிக்கல்விதுறையின் பொதுவான வேலையாகவே இருக்கிறது.

முக்கியமாக, பள்ளிக்கல்வித்துறை மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசுக்கு அடகு வைக்ககூடிய சூழ்நிலையில் வந்துள்ளது. மாநில அரசு பள்ளிகளை மூடக் கூடிய செயல், 5, 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு வைப்பதாக வந்த அறிவிப்பு, புதிய கல்வி கொள்கையை ஆதரிக்க கூடிய நிலை என அனைத்திலும் முழுக்க முழுக்க மாநில உரிமைகளை விட்டு கொடுக்கும் நிலைக்கு பள்ளி கல்வித்துறை வந்துவிட்டது. இதில் முக்கியமான ஒன்று நீட் தேர்வுக்கு நம் மாணவர்களை பலியாக்கியது. இந்த பள்ளிக்கல்வித்துறை எந்த ஒரு விஷயத்தையும், கல்வியுடன் சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களை கலந்து ஆலோசனை செய்வதில்லை. கல்வியை பொறுத்தவரை  எதிலுமே தெளிவான முடிவுகள், அறிவுப்புகள் பள்ளிக்கல்வித்துறையில் இல்லை.

சமீபத்தில், கொரோனா உச்சத்தில் இருக்கும் நேரத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவோம் என்பது, பின்னர் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் எதிர்ப்புகளை அடுத்து அதனை ரத்து செய்வது, முதலில் பிறர் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது என்பதுபோல் வீம்பு பிடிப்பது, எல்லாம் இந்த பள்ளிக்கல்வித்துறையில் உள்ளது. இதேபோல் இந்த முறை பாடத்திட்டங்களை மாற்றுவது, அதற்கு பிரச்னை வந்த பிறகு மறுப்பது, எல்லாமே மாணவர்களை குழப்பத்திற்கு மாற்றக்கூடிய செயலாகத்தான் உள்ளது. ஒரே குழப்பத்தில் மாநில பள்ளிக்கல்வித்துறை உள்ளது. குறிப்பாக ஆன்லைன் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை என்றார்கள், பிறகு அமைச்சரே ஆன்லைன் வகுப்புக்கு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்றார்.

பின்னர் ஆன்லைன் வகுப்பு எடுக்க போகிறோம் என்றார், உடனே ஆன்லைன் இல்லை, தொலைக்காட்சி மூலமாக வகுப்பு என்றார், அதுவும் 5 தொலைக்காட்சி என்றார், பின்னர் 10 என்றார், பின்னர் 14 என்றார். அப்படி என்னதான் முதல்வர் துவக்கிவைத்தார் என்று பார்த்தால் கடந்த வருடம் தொடக்கி வைத்ததை தற்போது துவக்கியுள்ளார். சரி அது, எத்தனை பேரை சேர்ந்தது என்று பார்த்தால் 1 லட்சத்து 85 ஆயிரம்  தான் சென்றடைந்துள்ளது. மேலும் அட்டவணைப்படி தொலைக்காட்சிகளில் வரவில்லை. அரசுக்கே எல்லாமே குழப்பம். தற்போது நோய் தொற்று காலம், இந்த நிலையில் கல்வி ஆண்டின் பாடத்திட்டதை குறைத்திருக்க வேண்டும். சிபிஎஸ்இ குறைத்திருக்கிறார்கள், அவர்கள் திருக்குறள் மற்றும் சில முக்கிய பாடங்களை நீக்கி விட்டனர். காமராஜர், கலைஞர் காலத்தில் இருந்து பல பள்ளிகள் திறக்கப்பட்டது.

ஆனால் இந்த அரசு தொடக்க பள்ளிகளை மத்திய அரசின் அழுத்தத்திற்கு பயந்து மூடி உள்ளது. அரசு எதையுமே ஆராய்ந்து, அறிவிப்புகளை தெரிவிப்பதில்லை. அவசர கோலத்தில் அறிவிக்கின்றனர். இந்த அரசில் பள்ளிக்கல்வித்துறை சீரழிந்துள்ளது. வீம்புக்கு 12ம் வகுப்பு தேர்வு வைத்ததால் பல மாணவர்கள் தேர்வு எழுதாமல் உள்ளனர். மறுதேர்வுக்கும் 34 ஆயிரம் மாணவர்களில் 200க்கு மேற்பட்டோர்தான் முன்வந்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை எதிர்கால சந்ததிகளுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். அதில் குழப்பினால் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். அரசு எதையுமே ஆராய்ந்து, அறிவிப்புகளை வெளியிடுவதில்லை. அவசர கோலத்தில் அறிவிப்பதால் பள்ளிக்கல்வித்துறை சீரழிந்துள்ளது. வீம்புக்கு 12ம் வகுப்பு தேர்வு வைத்ததால் பல மாணவர்கள் தேர்வு எழுதாமல் உள்ளனர்.


Tags : M. Rasendran ,Tanjore University ,Vice Chancellor , Curriculum, Appropriate Type, Change, Disruption, M.Rasendran, Former Vice Chancellor, Tanjore University
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்