மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி சார்பில், பயன்பாடற்ற டயரில் காந்தி நிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு சிறுவர் விளையாட்டு பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின், சுகாதார பயன்பாட்டிற்காக பல வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களில் இருந்து மீண்டும் பயன்படுத்த முடியாமல்போன, டயர்களை கொண்டு பல்வேறு வகையான உருவச்சிலைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கருங்குழி பேரூராட்சியில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் மகாத்மா காந்தியின் உருவச்சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வரிக்குதிரை, அன்னப்பறவைகள், மயில், புறாக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உருவ சிலைகள் சிறியதும் பெரியதுமாக இந்த டயர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பேரூராட்சி அலுவலகம் வந்து செல்லும் பொதுமக்கள் மட்டுமின்றி, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிப்பவர்களும் கண்டு ரசித்தபடி செல்வது குறிப்பிடத்தக்கது.