×

கோவையில் போலி இ - பாஸ் மூலம் வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபர் கைது!: போலீசார் நடவடிக்கை

கோவை: கோவையில் போலி இ - பாஸ் மூலம் பயணிகளை ஏற்று வந்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட கேரள கும்பலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவே பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இறுதி சடங்கு, திருமணம், மருத்துவ சிகிச்சை பெறுவோர் வெளி மாவட்டங்களுக்கு செல்ல சில வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. வெளிமாவட்டங்களுக்கு செல்வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அவசர இ- பாஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் ஆன்லைன் விண்ணப்பம் செய்து பாஸ் பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில் கோவையில் போலி இ - பாஸ் மூலம் பயணிகளை ஏற்று வந்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அவசர தேவைகளின்றி மற்ற வேலைகளுக்காக பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் செல்வோருக்கு இ - பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த கும்பல் ஒன்று முகநூல் மூலம் பயணிகளை கண்டறிந்து எர்ணாகுளம், விசாகபட்டினத்துக்கு திருமணம் மற்றும் இறப்பிற்கு செல்வதாக கூறி இ - பாஸ் பெற்று அதன் மூலம் கோவை வழியாக செல்ல அனுமதி பெற்றுள்ளனர்.

பின் கேரளாவில் இருந்து கோவை உள்ளிட்ட பிற மாவட்டம் செல்லும் பயணிகளையும், ஆந்திரா செல்லும் பயணிகளையும் வழியில் ஏற்றுக் கொண்டு, வாலையார் சோதனை சாவடி வழியாக சென்று வந்துள்ளனர். தொடர்ந்து ஒரே வாகனம் அடிக்கடி எல்லைக்குள் கடப்பதால் சந்தேகமடைந்த போலீசார், குழு ஒன்று அமைத்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்வதாக முகநூல் மூலம் கேரள கும்பலிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பேரம் பேசி வாலையாறு எல்லைக்குள் வந்த பேருந்தை மடக்கி பிடித்த போலீசார், அதிலிருந்து முகமது சபாத் என்பவரை கைது செய்து பேருந்தினை பறிமுதல் செய்தனர்.

Tags : Coimbatore , Coimbatore: A man has been arrested in connection with a fake e-pass scam
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்