புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தப்பி சென்ற இளைஞரை 15 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு போலீசார் மீண்டும் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு பின்னர், சடலத்தைக் கண்மாய் கரையோரம் உள்ள கருவேலங் காட்டுக்குள் மர்மநபர்கள் வீசிச் சென்றார். இந்தத் துயரமான சம்பவம் தமிழகம் முழுவதும் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக புதுகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கழிவறை செல்வதாக கூறி சென்ற ராஜா திடீரென்று தப்பியோடினார். இதனையடுத்து ஏராளமான போலீசார் முகாமிட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முள்ளூர் காட்டுப்பகுதியில் ராஜா பிடிபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பியோடிய விவகாரத்தில் அஜாக்கிரதையாக இருந்த ஏட்டு முருகையன், காவலர் கோகுலகுமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.