ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், கிருஷ்ணா கால்வாய் சேதம் ஏற்பட்டுள்ளது. சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆந்திர-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஆண்டு தோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் மேலும், 3 டிஎம்சி சேதாரம் என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் 8 டிஎம்சி கொடுத்துவிட்டு ஆந்திர அரசு கடந்த மாதத்துடன் கிருஷ்ணா நீரை நிறுத்தி விட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கிருஷ்ணா கால்வாய் கரைகள் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து அம்பேத்கர் நகர், அனந்தேரி, போந்தவாக்கம், கலவை போன்ற பகுதிகளில் கால்வாயை விரைந்து சீரமைக்க வேண்டும். அப்போதுதான், ஆந்திர அரசு நமக்கு தண்ணீர் வழங்கும்போது வீணாகாமல் பூண்டி ஏரியை வேகமாக வந்தடையும். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.