பந்தலூர்: பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட கரியசோலை பகுதியில் அரசு கூட்டுறவு துறை சார்பில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை ஒன்று ரேஷன் கடையின் கதவை உடைத்து ஒரு மூட்டை அரிசியை தும்பிக்கையால் வெளியே இழுத்து மிதித்து சேதம் செய்தது. இதுகுறித்து, ரேஷன் கடை விற்பனையாளர் ராதாகிருஷ்ணன் வனத்துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவும் அதே யானை ரேஷன் கடை கதவை உடைத்து சர்க்கரை, உப்பு ஆகியவற்றை தின்று சேதம் செய்துள்ளது. தகவலறிந்து வந்த பிதர்காடு ரேஞ்சர் மனோகரன், பாரஸ்டர் மாண்பன், பாரஸ்ட் கார்டு ராபின்சுமித் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானையை விரட்டினர். தொடர்ந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர் ரேஞ்சர் மனோகரன் கூறுகையில், ‘‘வனத்துறைனர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைத்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்,’’ என்றார்.