சென்னை:தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த பாதிப்பில் அமைச்சர்களும் தப்பவில்லை. இதுவரை கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ ஆகிய 3 அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 எம்எல்ஏக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல அமைச்சர்களின் கார் டிரைவர்கள், உதவியாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவாமல் இருக்க அமைச்சர்கள் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர். அதற்கு ஒருபடி மேலே போய் தமிழக சத்துணவு அமைச்சர் சரோஜா தனது காரில் பாதுகாப்பு வசதியை வித்தியாசமான முறையில் ஏற்படுத்தியுள்ளார். அதாவது, தனது காரில் ஓட்டுனர் மற்றும் பின் இருக்கையில் இருப்பவர்கள் யாருடனும் தொடர்பு இல்லாத வகையில் பாலீத்தின் கவரால் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளார். புதுமையான முறையில் அமைச்சர் சரோஜா தனது காரில் செய்திருப்பதை பார்த்து எல்லாரும் பாராட்டி வருகின்றனர்.