திருத்தணி: திருத்தணியில் கன்டெய்னர் லாரி மோதியதில் போக்குவரத்து சிக்னல் உடைந்து விழுந்து சேதமானது பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன் மற்றும் பேருந்துகள் மூலம் வருகின்றனர் இதற்காக திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பல்வேறு இடங்களில் சிக்னல் அமைத்து ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சித்தூர் சாலை, எம்.பி.எஸ் சாலை, அரக்கோணம் சாலை, பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருத்தணி போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல் மற்றும் சாலையின் பெயர் குறித்த விவரங்கள் அடங்கிய பதாகை அமைக்கப்பட்டது. மேலும் திருத்தணி நகரத்தில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் திருத்தணி அரக்கோணம் சாலை, மா.பொ.சி. சாலை சந்திப்பில் இருந்த போக்குவரத்து சிக்னல் மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில், சிக்னல் கோபுரம் உடைந்து சாலையில் விழுந்தது. தகவலறிந்த திருத்தணி போக்குவரத்து போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் கிடந்த சிக்னல் கம்பத்தை அப்புறப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து சாலையில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. மேலும், விபத்துக்கு காரணமான லாரியை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது ேநரம் பரபரப்பு ஏற்பட்டது.